விருதுநகர் அருகே கல்குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த டெட்டனேட்டர், ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருள்களை சூலக்கரை போலீஸார் பறிமுதல் செய்து உரிமையாளரையும் கைது செய்தனர்.
விருதுநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாகவும், தேவைக்கு அதிகமாகவும் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடியுப்புகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கல்குவாரிகளின் சோதனை செய்வதற்கு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் அப்பாத்துரை தலைமையில் ஆமத்தூர், சூலக்கரை, பட்டம்புதூர் உள்ளிட்ட பல்வேறு கல்குவாரிகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
அதில், விருதுநகர் அருகே சூலக்கரை கல்குவாரியில் சட்டவிரோதமாகவும், தேவைக்கு அதிகமாகவும் 38 டெட்டனேட்டர், 38 ஜெலட்டின் குச்சிகள், 3 கிலோ வெடியுப்பு உள்ளிட்ட வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பது சோதனையில் தெரியவந்தது. உடனே அவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கல்குவாரியின் உரிமையாளரான பட்டம்புதூர் ராமர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.